மௌனமான நேரம் (மருதம்)

Thursday, September 23, 2010

நொடிக்குள் யுகங்கள் நுழைந்திருந்த தருணம்
வெடிக்கும் அழுகை நனைத்திருந்த வதனம்
நடுங்கும் விரல்கள் கோர்த்துவைத்த மலர்கள்
கலங்கும் மனதில் கனத்திருந்த வலியொடு

நிலைக்கும் விழிகளில் உறைந்திருக்கும் தேடல்
களிக்கும் பொழுதுகளை அழித்திருந்த ஊடல்
இழைக்காப் பிழைக்குச் சுமந்திருந்த சாடல்
இலக்கின்றித் திரியும்என் கள்ளமில்லாக் காதல்

இலையோடு தழைதின்று இளைப்பாறும் ஆநிரையோடும்
கரையின்றிக் கசிந்தோடும் கண்ணீரின் துணையோடும்
பசியோடும் நிசியோடும் உயிரோடும் உறவோடும்
கரைகின்றேன் உறைகின்றேன் கண்ணுறக்கம் வெறுக்கின்றேன்

கனவெல்லாம் பொய்யாம் கற்பனையெல்லாம் பொய்யாம்
நிஜம்கூடப் பொய்யாம் இந்நிலமெங்கும் பொய்யாம்
மனமெல்லாம் பொய்யாம் அதில் மலைபோல முளைத்திருக்கும்
காதல் கடும் பொய்யாம் அது மாயை தரும் நோயாம்.

0 உணர்வுகள்:

Powered by Blogger.