மௌனமான நேரம் - குறிஞ்சி

Tuesday, August 17, 2010

அரவமில்லாத இந்த
அர்த்த ராத்திரி
உன் அரவணைப்பில்லாமல்
அர்த்தமற்றதாய்..

குறிஞ்சியின் குளிரிலும்
கொதிக்கும் என்
மனதை
எதைக் கொண்டு ஆற்றுவேன்
உன் குரலைத் தவிர

ஓசையில்லாத
இந்நிசப்த வேளையில்
என் மனதைக் கசக்கும்
வலிகள் முழுதும்
கசிகின்றன
விசும்பல்களாய்..

உச்சி முகர்ந்து உன்னை
முத்தமிட்ட
உதடுகள் இரண்டும்
உயிரற்று
உலர்ந்தனவாய்..

தாகம் எடுப்பினும்
தண்ணீரை மறுக்கிறேன்
காதல் கணப்பதால்
கண்ணீரைச் சுமக்கிறேன்

பாலுண்ண பசித்து வரும்
பச்சிளம் குழந்தையைப்
புறந்தள்ளும்
தாய்ப் போலத்
தள்ளுகிறாய் என்னை
உயிரோடுக்
கொள்ளுகிறாய்ப் பெண்ணை!

குறிகூறும் குறத்தியும்
அறிந்து சொன்னாள்
என் மனம்
பறிபோன செய்தியை..

உன் கரங்கள் தரும்
கதகதப்பில்
நான் கண்ணுறங்கிப்
போவது
கனவில் மட்டுமே..
Powered by Blogger.